பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு - உலக மகாகவி சுப்ரமணிய பாரதி.

Wednesday 28 August 2013

கூறாய்க் கண்ணா! கோகுலக் கிருஷ்ணா!!


ஊனில் ஊறி உணர்வில் உருகி
உயிரினில் கலந்த ஒளியே
காணும் யாவிலும் காண்பார் விருப்பமாய்
காட்சி அளித்திடும் கதிரே
தேனூறும் பூவிலும் திரண்டெழும் மணத்திலும்
உருவஅருவமாய் விளங்கிடும் அமுதே
யானுனை தொழு திடும் பொழுதினில்
யாதானும் வந்துள் கூறாயோ
வேணு கானப் பிரியனே எந்தன்
வேதனை காண் கிலையோ
வாராய்க்கண்ணா! மாடுகள் மேய்த்து போதும்
கூறாய்க்கண்ணா மேயும் என்மனம்
வேறாய், வேரோடுவேராய் போகும்வழி தனையெனக்கு

கூறாய்க் கண்ணா! கோகுலக் கிருஷ்ணா!!

Wednesday 31 July 2013

அபிராமி உந்தன் பெருமைக்குத் தானிது அழகாகுமோ!



அன்னையே அபிராமித் தாயே - எல்லையில்லா  
ஆனந்த ரூபியே அங்கயர்க் கண்ணியே 
அண்ட சராசரம் நின்றாளும் தேவியே 
அருவமாய் உருவமாய் உளதாய் இலதாய் 
அணுவினுளும் அணுவாய் விளங்கோய்!

ஓரிதயம் மட்டும் படைத்து விட்டு 
ஓர வஞ்சம் செய்தா யம்மா 
காரிருள் போக்கும் பேரொளியே உந்தன் 
கழல்கள் மாத்திரமே அதில் பொருதமிடமில்லை 
ஏழேழு உலகம் நிறைந்தவளே உனையெப்படி 
எந்தன் இதயம் நிரப்பி வைப்பேன்?

இருகண்களை மட்டும் படைத்து விட்டு 
எனையிப்படி ஏமாற்றி விட்டாயே! 
ஒருகோடி கண்கள் போதுமோ? - உனைப்  
பலகோடிமைல் தள்ளி நின்று கண்ணுறவே 
சொல்லடி சிவசக்தி சூட்சுமம் யாதென்று!

நில்லடி யானுனைத் தான் அழைக்கின்றேன்!  
கள்ளமில்லா எந்தன் உள்ளம்தனை அறிவாயே! 
பிள்ளை நான் உனைப் பணிந்துக் கேட்பதற்கு 
ஒருபதில் கூறாயோ எந்தன் உணர்வினில்
உயிரினில்; பேரமுதென பொங்கிப் பெருகாயோ!
  
எத்தனை ஆயிரம் பிறவிகள் எடுத்தேன் 
எத்தனைமுறை யானுனைக்  கூவி யழைத்தேன் 
இத்தனைக் காலம் ஆனப் பின்னும் 
எந்தன்மீது கருணை கொள்ளாமல் லிருப்பது 

உந்தன் பெருமைக்குத்தானிது அழகாகுமோ!

Tuesday 2 April 2013

மெஞ்ஞான விஞ்ஞானி டாக்டர்.ஏ .பி.ஜெ அப்துல் கலாமின் அழகுக் கவிதை!




"நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம்என் இறைவா!
நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அறிவுப் புதையல்என் இறைவா!
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அமைதித் தீவுஎன் இறைவா!
இறைவா, இறைவா! நூறு கோடி இந்திய மக்கள் லட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்து அடைவதற்கு அருள் புரிவாயாக!"
- டாக்டர் ஏ .பி. ஜெ. அப்துல் கலாம்.




மேதகு மெஞ்ஞான விஞ்ஞானி ஐயா அப்துல் கலாம் அவர்களின் அருமையானக் கவிதையத் தொடர்ந்து அவரின் கவிதையின் தாக்கத்தால் விளைந்த எனது கவிதை இதோ!

உழைத்து உன்னத வாழ்வதை அடைய 
உலகோருக்கு அருள்வாய் இறைவா!
களைப்பில் காலயர்ந்து அமர்வோருக்கு -குளிர் 
நிழலென விளங்கும் பரமே!

சமநிலை காணமுடியா தெனினும்  - யாவரும் 
சமமெனும் மனநிலைவளர அருளும் -விமலா 
யமனையும் கண்டு இங்கு கலங்கிடாத 
மனம்தனை அளிப்பாய் இறைவா! 

தனெக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் 
மனத் தெளிவினை விளக்கிடும் இயற்கையது
உனதரும் விளக்கமதை உலகோர றிவதில்லை 
யானெனதெனும் செருக்கை அழிப்பாயோ!

ஒழுக்கம் உயர்வளிக்கும் உயர்வது உண்மையாலே 
செழித்து வளர்ந்துவளம் கொழிக்கும் -இருந்துமதை 
களித்து இன்புற கருணைமிகு தேவா 
விழித்து நினதடிப்போற்று தலாலே!